
ராஜம் ரஞ்சனி 1886 ஆம் ஆண்டு மேற்கத்திய மருத்துவத்துறையில் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி ஆனந்தி கோபால் ஜோஷி. மார்ச் 31ம் நாள் 1865ஆம் ஆண்டு மும்பைக்கு அருகிலுள்ள கல்யாண் எனும் சிறு பட்டணத்தில் பிறந்தவரான இவர், ஒன்பது வயதில் அஞ்சல் குமாஸ்தாவாக பணியாற்றிய கோபால் ஜோஷிக்கு மணமுடிக்கப்பட்டார். முற்போக்குவாதியான கோபால் ஜோஷி பெண் கல்வியை ஆதரிப்பவராக இருந்தார். திருமணத்திற்குப் பின் ஆனந்தியின் கல்வியைத் தொடர ஊக்குவித்தார். ஆனந்தி தன் பதினான்காம் வயதில் ஆண் சிசுவை ஈன்றெடுத்தார். போதிய மருத்துவ வசதி இல்லாததால் குழந்தை பத்து நாள்களில் இறக்க நேரிட்டது. இந்தத் துயர சம்பவமே ஆனந்தி மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுக்க முக்கிய தூண்டுகோலாய் உருவெடுத்தது. கோபால் ஜோஷியின் ஊக்குவிப்பினால் பலவித இன்னல்களைக் கடந்து ஆனந்தி மருத்துவப்படிப்பை வெற்றிக்கரமாக முடித்து 11 மார்ச் 1886ம் நாளன்று பட்டம் பெற்றார். கமலா சோஹோனி அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப்பெண். தன் இளங்கலை பட்டப்படிப்பை பெளதிகம், வேதியயல் துறையில் முதல் நிலையில் தேறியவர் மேற்கொண்டு ஆய்வுத்துறையில் ஈடுபட எண்ணி ஆய்வு மையத்திற்கு விண்ணப்பித்தபோது அவர் பெண் என்ற காரணத்தினால் மட்டுமே அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பெண்கள் ஆய்வுத்துறையில் ஈடுபடத் தொடங்காத காலம் அது. பெண் என்ற ஒரே காரணத்தால் தன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதைக் கமலாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. போராட்டங்களுக்குப் பின்னர் ஆய்வு மையத்தில் ஒரு வருட பயிற்சிக்கால நிபந்தனையின்படி நுழைய அனுமதிக்கப்பட்டார். ஒரு வருட பார்வையில் கமலாவின் பணி திருப்தியளிக்கும்படி இருந்ததால் உயிரியல் வேதியல் துறையில் ஆய்வுப்பணியைச் செய்ய அனுமதிக்கப்பட்டார். இந்திய பெண்கள் என்றோ தங்கள் லட்சியங்களைச் சாதிக்க தொடங்கிய பாதச்சுவடுகளாக இவற்றை கருதலாம். ஆனாலும் எல்லா பெண்களின் லட்சியங்களும் நிறைவேறுவதில்லை. லட்சியங்களைத் தவிர்த்து குடும்பமும் பெண்களின் மகிழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாய் திகழ்கின்றது. ஆனால் ரத்னபாயின் வாழ்க்கை வெறுமையானது. கணவனோ பிள்ளைகளோ மகிழ்ச்சிக்கு வித்திட்டதில்லை. மாறாக வாழ்க்கையின் துன்பத்தை மேலும் அதிகமாக்கிவிட்டிருகின்றார்கள். வெறுமை நிறைந்த தன் வாழ்க்கையிலும் ரத்னபாய் தன் தோழி அம்புவுக்குக் கடிதம் எழுதுகின்றாள். எதற்காக எதைப்பற்றி கடிதம் எழுதுகின்றாள் என்பதை அறிய நினைத்தால் இன்னும் ஆச்சர்யமாக இருக்கும். தான் வாங்கியிராத பட்டுப்புடவையைப் பற்றி வர்ணித்து எழுதுகின்றாள். ராதையின் அழகும் கண்ணனின் கானமும் கலந்து வண்ணங்களாய் பட்டுபுடவையில் பரவ செய்தவனைக் கலைஞனென புகழ்கின்றாள். இத்தகைய வர்ணிப்புகளுடன் ஆங்கிலத்திலேயே கடிதம் எழுதுகின்றாள். கடிதத்தைப் படித்த தோழி அவளுடைய ஆங்கிலத்தை மெச்சுகின்றாள். தனக்கும் தன் தோழிகளுக்கும் அதே போன்ற புடவைகளை வாங்கி அனுப்புமாறு கேட்டு கொள்கின்றாள். சேலைகளை வாங்கி வைத்து விட்டு மீண்டும் ஆங்கிலத்திலேயே தோழிக்குப் பதில் அனுப்புகின்றாள். எழுதிய கடிதத்தைப் பலமுறை படித்துப் பார்க்கின்றாள். இது சுந்தர ராமசாமியின் ‘ரத்னபாயின் ஆங்கிலம்’ என்ற கதை. குடும்ப மகிழ்ச்சியே தங்களின் இன்பமாக கருதும் பெண்களுக்கு அத்தகைய மகிழ்ச்சி கிடைக்காத பட்சத்தில் வாழ்க்கை வெறுமையாய் தோன்றுகின்றது. அதை நிரப்பிக் கொள்ள அவர்களுள் இருக்கும் ஏதோ ஒரு விஷயத்தை வெளி கொணரவே விரும்புகின்றனர். அது சிறிய விஷயமாக இருந்தாலும் கூட அதையே வாழ்க்கையின் அர்த்தமாக்கி கொள்ள தயாராகின்றனர். “பாஷை ஒரு அற்புதம். கடவுளே உனக்கு நன்றி” என்றாள்.“இல்லாவிட்டால் எனக்கு வேறு எதுவுமில்லை” என்றாள். கதை முற்று பெறுமுன் இவ்வரிகள் வருகின்றன. அவளது வாழ்க்கையின் முழு திருப்தியையும் மகிழ்ச்சியையும் இவ்வரிகள் எடுத்துரைக்கின்றன. அவளது ஆங்கில புலமை மட்டுமே அவளுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தைக் கற்பிப்பதாய் உள்ளது. அது மட்டுமே அவளது திறன். அதை உணர்ந்து கொண்டவளாய் அதை மட்டுமே எண்ணி எண்ணி மனம் மகிழ்கின்றாள். தன் வாழ்க்கை குறைகளை அவள் கொட்டி தீர்க்கவில்லை. மாறாக வாழ்க்கையின் திருப்தியைத் தொட முயற்சிகின்றாள். பெரும்பாலும் மனிதர்களின் வாழ்க்கையில் அவரவர் கண்களுக்கு நிறைகள் இருந்தும் குறைகளே அதிகமாக தெரிகின்றன. திருப்தியைத் தொட முயற்சித்தால் நிறைகள் வெளிபடும் தருணங்கள் அதிகம். நன்றி: வல்லினம். காம் – ஜூன் 1, 2014

சு. விஜய் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ பொதுவான கதை வடிவில் அல்லாமல் மாறுபட்ட அமைப்பில் படைக்கப்பட்டிருக்கும் ஒரு நாவல். நாவல் வெளியாகியிருந்த 1981ஆம் ஆண்டில் தமிழ் இலக்கியத்திற்கு நிச்சயம் இது ஒரு புதிய முயற்சியாக இருந்திருக்கக்கூடும். எழுத்தாளர், முதல் முறை இந்தப் புது முயற்சியை (நான் அறிந்த வரையில்) அச்சுக்குக் கொண்டுவந்த பதிப்பகத்தார் ஆகியோரின் படைப்பு மீதான உறுதியும் நம்பிக்கையும் பாராட்டுக்குரியது. பாலு என்கிற தமிழ் எழுத்தாளர், மலையாள எழுத்தாளுமையான ஜோசஃப் ஜேம்ஸின் (ஜே.ஜே) சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவருடனான தன் அனுபவங்களையும் , அவருடைய மனைவி, நண்பர்களிடம் பேட்டி கண்டு அவர்கள் அவரைப் பற்றிப் பகிர்ந்துகொண்டவற்றையும் நாவலின் வழி வாசகர்களிடேயே சொல்லிச்செல்வதாக நாவல் புனையப்பட்டிருக்கிறது. இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்நாவலின் இரண்டாவது பகுதி முழுக்கவும் ஜே.ஜேவின் நாட்குறிப்பின் முக்கியமான பகுதிகளை, பாலு தொகுத்து மொழிபெயர்த்துத் தந்திருப்பதாக அமைந்துள்ளது. அதுவே ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ என்பதாகும். இந்த மாறுபட்ட அமைப்பே நாவலைப் பொதுவான கதை வடிவிலிருந்து விலக்கிப் புதிய வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. நாவலின் மையப் பாத்திரம் ஜே.ஜேதான். மேன்மையானது என்று பெரும் அறிவாளிகளாலும் சிந்தனையாளர்களாலும் முற்போக்குவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் கம்யூனிசம், கடவுள் மறுப்பு முதலிய தத்துவங்களின் மீதான அடிப்படைக் கேள்வியை எழுப்புவனவாக இருக்கின்றன மலையாள எழுத்தாளர் ஜே.ஜேவின் சிந்தனைகள். ஜே.ஜே சமூகத்தை அணுகும் விதம் பொதுப் புத்திக்குப் புதிதானது; மிகச் சிக்கலானதும், புரிந்துகொள்ளச் சற்றுச் சவாலானதும்கூட. நாவலை அவற்றை வாசிக்கும்போது அவற்றுடன் நாம் ஒத்துப்போகலாம் அல்லது அவற்றுக்கெதிரான தர்க்கம் நமக்குள் எழலாம்; அது முக்கியமல்ல. நாவல் பல தளங்களில் நம் சிந்தனையைச் செலவிடத் தூண்டுவதாகப் படைக்கப்பட்டிருப்பது நாவலின் பலம். ஒரு வாசகருக்கு எழுத்தாளரிடம் ஏற்படும் ஈடுபாடு காதலுணர்ச்சிக்குச் சிறிதும் குறைந்ததன்று. அப்படி ஜே.ஜேவின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டுவிடும் பாலு என்கிற தமிழ் எழுத்தாளன் கதாபாத்திரம் (கதை சொல்லி) இந்நூலின் ஆசிரியர் சுந்தர ராமசாமியின் பிரதிபலிப்பாகவே இருக்க வேண்டும். பெரும்பாலான அல்லது எல்லா எழுத்தாளருக்கும் அப்படி ஒரு வாசக பர்வம் இருக்கவே செய்யும். ஒரு வாசகனாக ஜே.ஜேவைச் சந்திக்க, உரையாட என்று பாலுவுக்குள் எழும் தவிப்புகள், பின் பாலுவும் ஒரு எழுத்தாளனான பிறகு ஜே.ஜேவைச் சந்தித்துப் பேசக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நிகழ்பவை, ஜே.ஜே இல்லாத இடங்களில் ஜே.ஜே இருந்திருந்தால் இப்படிப் பேசியிருப்பான் என்று அவன் மன ஓட்டத்தை அறிந்து வைத்திருத்தல், ஜே.ஜே இறந்த பிறகு அவனுடைய நாட்குறிப்பின் பகுதிகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்து அவனுடைய சிந்தனைகள் உயிர்ப்புடன் இருக்க வேண்டுமென அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் என பாலு கதாபாத்திரம் நல்ல முறையில் வந்திருக்கிறது. ஒரு நாவல் ஒரு வாழ்க்கையைக் காட்டிச் செல்வதாக அமைக்கப்படும். அதுவே பொதுவான அல்லது பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கும் நாவல் வடிவம். அவை வாசகரை உணர்வுரீதியாகத் தழுவ முற்படுபவை (நான் வாசித்த அல்லது கேள்வியுற்ற சொற்ப எண்ணிக்கையின் அடிப்படையில்). ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையின் சில பகுதிகள் , சிந்தனைகள் , தத்துவங்கள் இன்ன முறையென்று அல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்நாவலில் கடத்தப்பட்டிருப்பதால் ஒரு எழுத்தாளருடைய வாழ்வியலைச் சுருங்கச் சொல்வதாகக் கொள்ளலாம். ஆனால், உணர்வுரீதியாக அல்லாமல் இந்த நாவல் அறிவு சார்ந்தும், தத்துவங்கள், சிந்தனைகள் சார்ந்தும் பெரும்பாலும் பயணிக்கிறது; நூல் வடிவத்தைக் கடந்து, இந்த நாவல் மற்ற நாவல்களிலிருந்து தனித்துத் தெரிவது இந்த இடத்தில்தான். எழுத்தாளர்களின் வாழ்க்கை, இரு எழுத்தாளர்களின் சந்திப்பு, அவர்களுக்கிடையேயான உரையாடல்கள் - விவாதங்கள், இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள், கூட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளை வாசிக்க நேர்கையில் இயல்பாக உள்ளூரப் பரவசம் கொள்ளும் வாசகன் நான். அப்படிப் பரவசமான அனுபவங்கள் நிறைய கிடைக்கப் பெற்றேன் இந்த நாவலில். எந்த ஒரு துறையிலும் புதுமையான முயற்சிகள் வந்துகொண்டிருப்பது முக்கியம்; அந்த முயற்சி அந்தத் துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துமெனில் அது வெற்றி பெற வேண்டும் என்பதே அதிமுக்கியம். அவ்வகையில் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ இலக்கியத்தில் வெற்றி கண்ட புது முயற்சி என்பேன். ஒரு நாவல் படைக்கப்பட்டு 44 ஆண்டுகள் கடந்தும், அந்தத் தலைமுறை வாசகருடன் ஓர் அர்த்தமுள்ள, அவர் சிந்தனையை முடுக்கக்கூடிய வகையில், அவரைக் கேள்விக்குள்ளாக்கிப் பதிலைத் தேடச் செய்யும்படியான ஒரு உரையாடலை நிகழ்த்த முடியுமெனில் அது வெற்றிதானே. நன்றி: (சு. விஜய்யின் முகநூலிலிருந்து) https://www.facebook.com/story.php?story_fbid=1339417051200007&id=100053951742139&rdid=0HR4sZ25c1R18cBI#

ராஜமார்த்தாண்டன் கலைஞன் பதிப்பகம் வெளியீடு சுந்தர ராமசாயின் படைப்புலகை நேர்த்தியாக அறிமுகப்படுத்தும் நூல் இது. சு.ரா.வின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகள், நாவல்களின் சில பகுதிகள், சில கவிதைகள், கட்டுரைகள், உரைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த நூல், பல தளங்களில் இயங்கிய சுந்தர ராமசாமியின் எழுத்தின் வீச்சை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

சுந்தர ராமசாமி,அரவிந்தன் சாகித்திய அகாதெமி வெளியீடு சுந்தர ராமசாயின் வாழ்வையும் இலக்கியத்திற்கும் மொழிக்கும் அவர் செய்த பங்களிப்பையும் விரிவாகக் கூறும் நூல் இது. சு.ரா.வின் படைப்புலகம் குறித்த விரிவான அலசல்கள் இதில் உள்ளன. சு.ரா.வின் ஆளுமையைப் பற்றிய பகுதியும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. அவருடைய ஆளுமைக்கும் இலக்கியச் செயல்பாடுகளுக்கும் இடையிலுள்ள உறவையும் இந்நூல் சுட்டுகிறது.

ராஜமார்த்தாண்டன் காலச்சுவடு வெளியீடு கவிஞரும் விமர்சகருமான ராஜமார்த்தாண்டன் சுந்தர ராமசாமியின் கவிதைகள்மீதான தன்னுடைய வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார். சு.ரா.வின் கவிதைகளைப் பற்றிய விரிவான சித்திரங்களை இந்நூலில் காணலாம். கவிதையியல் குறித்த நூல் என்ற முறையிலும் இது முக்கியத்துவம் வாய்ந்தது.

புதுவை இளவேனில், அரவிந்தன் சுந்தர ராமசாமியின் புகைப்படங்கள், அவருடைய சிந்தனைத் தெறிப்புகள் ஆகியவற்றின் தொகுப்பு. புகைப்படங்கள் சு.ரா.வின் சிந்தனைகளின் காட்சிப் படிமங்களாக உருக்கொள்ளும் அனுபவத்தை இந்தப் புகைப்பட – சிந்தனைத் தொகுப்பில் காணலாம்.