அ.கா.பெருமாள் சு.ரா.வின் இல்லத்திற்கு அருகான்மைக்காரர் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. காலச்சுவடில் அவர் பதிவுசெய்திருக்கிற 7.1.1984 டைரிக் குறிப்பு சு.ரா.வையும் என்னையும் பற்றியது.
7.1.1984 - சனி
மாலையில் சு.ரா. வீட்டிற்குப் போனேன். அங்கே தாஜ் என்னும் இளைஞர் இருந்தார். ‘ஜே.ஜே.:சில குறிப்புகள்’ படித்துவிட்டு சு.ரா.வைப் பார்ப்பதற்கென்றே நாகர்கோவில் வந்திருந்தார். இவர் சிதம்பரம் அருகே சீர்காழியைச் சேர்ந்தவர். சவுதி அரேபியாவில் மோட்டார் மெகானிக் வேலை. சு.ரா.விடம் நாவலைப் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டார். சு.ரா., “என் நாவலில் வரும் கதாபாத்திரங்களுடன் வேறு யாரையாவது தொடர்புபடுத்திப் பேசினால் நான் என்ன செய்ய முடியும். அதற்கு நான் பொறுப்பல்ல. சிட்டுக் குருவியுடன் இந்துமதியோ சிவசங்கரியையோ ஒப்பிடுவதும் முல்லைக்கல்லுடன் ஜெயகாந்தனை இணைப்பதும் வாசகர்கள் செய்த வேலை. இப்படியே ஒப்பிடுவதாக இருந்தால் இந்தியாவில் பல எழுத்தாளர்களை ஜே.ஜே. நாவலின் பாத்திரங்களுடன் ஒப்பிட முடியும். இதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என்றார்.
அந்த இளைஞர் இரவு 11 மணிவரை சு.ரா.வுடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் நானும் சு.ரா.வும் அவர் தங்கியிருந்த பாஸ்கர் லாட்ஜில் கொண்டுவிட்டுவிட்டுத் திரும்பிவர மணி 12 ஆகிவிட்டது.
கடிதம் எழுதினால் உடனுக்குடன் பதில் எழுதும் படைப்பாளிகளில் சுந்தர ராமசாமியும் ஒருவர். நாம் எழுதியதை ஒட்டிய செய்திக்கு, நிச்சயம் அதில் பதிலிருக்கும். அவரது கருத்துக்கள் என்னளவில் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளக்கூடியதே. மேம்போக்காக எழுதுவதென்பது அவரிடம் எப்பொழுதும் கிடையாது. எனக்கு அவர் உடனுக்குடன் பதில் எழுதியதாகச் சொல்வது சுமார் இருபத்திமூன்று ஆண்டுகளுக்கு முன்! ‘ஜே.ஜே.:சில குறிப்புகள்’ வெளிவந்து பரபரப்பாகப் பேசப்பட்ட நேரம்!
சு.ரா.வின் ‘ஜே.ஜே.: சில குறிப்புக’ளை முதன்முதலில் படித்தபோது, வியந்து பிரமித்துப் போனேன், அந்த வயதில். அதன் தாக்கம் எனக்கு அப்படித்தான் இருந்தது. காணாததைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில், அவருக்குச் சௌதியிலிருந்து கடிதம் எழுதினேன். என் கடிதத்திற்குப் பதில் எழுதிய சு.ரா. என்னையொத்த வியப்பில் ‘அந்தப் புத்தகம் அங்கே எப்படி கிடைத்தது,’ எனவும், நாவலை வாசித்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கடிதம் எழுதியிருப்பதாகவும் எழுதியிருந்தார். நான் உணர்ச்சிவயப்பட்டது அவருக்குத் தெரிந்துபோனதில் வெட்கம் மேவியது. தவிர அந்தக் கடிதத்தில், என் ரசனைக் குறித்தறிய எனக்கு இஸ்டமான இசை / நாடகம்/ சினிமா / சித்திரம் போன்றவற்றைக் கேட்டு எழுதியிருந்தார். பொறுப்பாகப் பதில் எழுதினேன். கடிதத் தொடர்பு துளிர்த்தது.
‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ வெளிவந்த சில மாதங்களுக்குப் பிறகே, அப்படி ஒரு புத்தகம் வந்திருப்பதை அறிந்தேன். சூழ்நிலை அப்படி! அந்தப் புத்தகம் வெளிவந்த நாளில் நான் சௌதியில் இருந்தேன். அடுத்த ஆறுமாதம் கழித்து ஊர் வந்திருந்தபோது, சென்னை தி.நகரில் எனக்குத் தெரிந்த புத்தகக் கடைகளில் அந்தப் புத்தகத்தைத் தேடிப் போனபோது, அது கிடைப்பதாகவே இல்லை. பாண்டி பஜார் ‘கலைஞன் பதிப்பக’த்திற்குச் சென்றபோது, அதன் உரிமையாளர் தனக்கு கிடைத்த ‘complimentary copy’ ஒன்றுதான் தன்னிடம் இருக்கிறது என்றும், இத்தனை ஆர்வமாய்ச் சௌதியிலிருந்து அதைத் தேடி வந்திருப்பதனால் உங்களுக்குத் தருகிறேன் எனத் தந்தார். தொடர்ந்து, தான் இன்னும் அதைப் படிக்கவில்லை என்று கூறியவர், என்னை நேர்நோக்கி வியந்தபடி ‘அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது,’ என்றார்
ஒருமாத விடுமுறையில் ஊர் வந்த எனக்கு, பகலில் பெரும்பாலும் ஓய்வின்றிப் பணிகள்! இரவிலோ மனைவியோடு ஆற்ற வேண்டிய கடமைகளின் தவிர்க்க முடியாமை வேறு! இதையெல்லாம்விட மேலாக அந்தப் புத்தகத்தை படிக்க வேண்டிய மனநிர்ப்பந்தம் இன்னொருபுறம்! வேறுவழியின்றி அந்நாவலை வாசிப்பதற்கென நான் வகுத்துக்கொண்ட நேரம், நள்ளிரவு ஒருமணிக்கு மேல். எங்கள் ஊரில் அந்தக் காலக்கட்டத்தில் மின்சாரத் தடையும், குறையழுத்த மின்சாரத் தொல்லையும் சகஜம்.தொடர்ச்சியான இந்தக் குறைபாடுகள் எங்களுக்குப் பழகிக்கூட இருந்தது. சொல்லப்போனால் இரவு பத்து மணிக்குப் பிறகு நள்ளிரவு ஒரு மணிவரை அது தேவையும் இருக்காது. விளக்கை வலிய அணைத்துவிடும் நேரம் அது! தமிழனின் கலாச்சாரப்படி தாம்பத்தியம் இருளில்தான் ஜொலிக்கிறது! நள்ளிரவில் படிக்கவென்று கிளம்பும்போது வெளிச்சமில்லாது என்ன செய்வது? இருளில் வாசிக்கும் மந்திரமும் தெரியாதவன் நான்! வித்தைக்காரர்கள் யாரிடமாவது அதைக் கற்றிருக்கலாம்!
அப்படியான வித்தைக்காரர்கள் இல்லாமலில்லை! சமீபத்தில், நவீன இலக்கிய எழுத்தாளர் ஒருவர் சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களுக்கு ஒரே நேரத்தில் விமர்சனக் குறிப்புகள் எழுதியிருந்ததை ஒருதரம் வலைப்பதிவில் கண்டேன். இத்தனைக்கு அதீதகாரியம் செய்ய ஒருவருக்குச் சராசரி வாசிப்பு நேரங்கள் போதாது. தூக்கத்தில்கூட வாசிக்க முடிகிறவரால்தான் அது நடக்கும்! இந்தகையத் திறன் பெற்ற எழுத்தாளர் இன்றைக்குத்தான் என்றில்லை, அன்றைக்கும் இருந்தார்கள். வம்சத் தொடச்சி அற்றவர் இங்கு ஏது? இவருக்கு அண்ணன், பெரியண்ணனெல்லாம் இருக்கவே செய்தார்கள்!
தினைக்கும் விதியேயென சிம்னி வெளிச்சத்தில்தான் ஜே.ஜே.யோடு அடுத்த சல்லாபம்! கணவன் இப்படித் தள்ளிப்போய்த் திளைப்பதென்பது மனைவிமார்களுக்குப் பிடிக்காது. இன்னொன்றோடு என்பதே அவர்களுக்கு ஆகாது! அதுவும் இரவில் என்றால் சொல்லவே வேண்டாம்! தமிழ்ப் பெண்களுக்கு இந்த உணர்வு கூடுதல் சங்கதி! ஜே.ஜே.யோடு அன்யோன்யம் கொண்ட அடுத்த நிமிடமே அவன் என்னை விஸ்தீரண வெளிக்கு இட்டுச் சென்றுவிடுவான்! அங்கே மனிதர்களின் வேஷங்களும் நடிப்பும், அவலங்களாகக் காட்சி தரும் அலங்கோலக் கூத்தும், உண்மைகளின் வீழ்ச்சியும், நடப்பு உணர்த்தும் அற்பங்களின் ஜொலிப்பும் நம்மை நிலை குலைய வைக்கும்!
நல்ல புத்தகங்களைப் படிக்கிறபோது, அது மனதை வருடாமல் விடாது. அதன் கவிநயம் கொண்ட வரிகள் மூளையின் மடிப்புகளில் சிக்கியும் கொள்ளும். கருத்தாழம் கொண்ட பாராக்கள் நம்மைத் திக்குமுக்காட வேறு வைத்துவிடும். வாசிக்கிறபோது இப்படியானவைகளை அடிக்கோடிடுவது என்னளவில் தவிர்க்க முடியாது! பழக்கம் அப்படி! ‘ஜே.ஜே.: சில குறிப்புக’ளை வாசித்தபோதும் அப்படித்தான் நடந்தது. ஒவ்வொருநாளும் மண்ணெண்ணெய் வாசனையோடு கொஞ்சம் கொஞ்சமாக ஒருவார காலத்தில் அந்த நாவலை வாசித்து முடித்தேன். வாசித்து முடித்தபோது, அந்தப் புத்தகம் இன்னொரு பங்கிற்குப் பெருத்துவிட்டது! இப்படி அடிக்கோடிடுவதால் அறிவின் தானங்கள் பரிணமிக்கிறதோ என்னவோ, வாசித்த புத்தகம் பரிணமித்துவிட்டது!
விடுமுறை முடிந்து திரும்பவும் சௌதி போனபோது அந்தப் புத்தகத்தைக் கையோடு கொண்டு போனேன். விமானம் பறக்கிறபோது அதில் சில அத்தியாயங்களைப் படித்தேன். குறிப்பாய் ஜே.ஜே எழுதிய குறிப்புகள் அடங்கிய பகுதி. ரொம்பவும் இஸ்டமான பக்கங்கள் அவை! ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தத்துவக் குறிப்புகளைப் படித்தபோது ஏற்பட்ட மனதாக்கத்தையொத்த, நெகிழ்ச்சி தந்த பக்கங்கள் அவை! பூமியின் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் விமானம் பறந்தபோது, அதனை நான் படித்தேன் என்பது, அந்தப் படைப்பாளியின் தீவிர உழைப்புக்குச் செய்கிற மரியாதையாகவே நினைத்தேன். அதிலோர் திருப்தி!
சௌதியில் எனது இலக்கிய நண்பர்கள் சிலர் அந்த நாவலை என்னையொத்த ஆர்வத்துடனேயே படித்தார்கள். ஒரு விடுமுறை தினத்தில் நண்பர்கள் ஒன்றுகூடி அதைச் சர்ச்சிக்கவும் செய்தார்கள். பொதுவில் அந்த நாவல் எல்லோருக்கும் பிடித்திருந்தது. சிலர் அதை உன்னதம் என்றார்கள். ஹாஜா அலி என்கிற நண்பர் தனது கருத்தாக ஒன்றைச் சொன்னார். அது எனக்குப் பிடித்திருந்தது. ‘உன்னதம் நோக்கிய பயணத்தில் நம்பிக்கைத் தரும் நாவலிது’ என்றார்.
அன்றைக்குச் சௌதியில் நான் நடத்திய சிற்றிதழான தமிழ்ப் பூக்களில் அந்நாவலுக்கு ஒரு பக்கம் விளம்பரம் வெளியிட்டு, திருசுஜாதா கணையாழியில் அந்நாவலுக்கு எழுதியிருந்த விமர்சனத்தையும் மறுபிரசுரம் செய்திருந்தேன். அது வழக்கமாதிரியான சுஜாதாத்தனமான விமர்சனம்தான். இத்தனைக்கும் அன்றைக்கு கணையாழியின் ஆசிரியர் பொறுப்பை வகித்த ஜானகிராமன் சுஜாதாவைக் கூப்பிட்டுத் தமிழில் ஒரு நல்ல நாவல் வந்திருக்கிறதென்று சு.ரா.வின் ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ பற்றிக் குறிப்பிட்டு, “கணையாழியில் பிரசுரிக்க வேண்டி, டேமேஜ் இல்லாமல் அதற்கோர் விமர்சனம் எழுதித் தாருங்கள்”யெனக் கேட்டும், சுஜாதா தனது பாணியிலான சுவாரசியத்தோடே அந்த விமர்சனத்தை எழுதியிருந்தார்.
சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ தமிழில் புதிய வடிவங்களைக் கொண்ட நாவல். “ஒரு குட்டியை ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டன்கள் காதலிக்கும் தொடர் கதைகளை,” மாய காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு அவ்வுறுப்புகளை ஓயாமல் நம்மேல் உரசிக்கொண்டிருக்கும் அற்பங்கள் எழுதும் ‘தமிழ் சீதபேதி’ச் சூழ்நிலையில் ஆழ்ந்திருக்கும் நம் வாசகர்களுக்கு இதன் வடிவம் லேசில் அகப்படாது,” சுஜாதா இப்படி அந்த விமர்சனத்தைத் தொடங்கியிருந்தாலும், ரொம்பவும் பெருமைப்படத்தான் கடைசியில் முடித்திருந்தார்.
ஜே.ஜே.:சில குறிப்புகள்’ நாவலை மெச்சி வெளிவந்த தமிழ்ப் பூக்களையொட்டி, அறிமுகமே இல்லாத ஒருவர் திண்டுக்கல்லிலிருந்து என் சௌதி முகவரிக்குக் கடிதம் எழுதியிருந்தார். ‘தமிழக முற்போக்கு இலக்கியச் சிற்றிதழ்’ அமைப்பின் காரியதரிசியாம் அவர்! “பிற்போக்குத்தனமான ஒரு நாவலுக்கு நீங்கள் இத்தனை முக்கியத்துவம் தந்திருக்கக் கூடாது” என்று கோபத்தைக் காட்டியிருந் தார். அந்தக் கடிதத்தை வாசித்தவுடன் தோன்றிய முதல் கேள்வி அந்நாவலில் எதைப் பிற்போக்குத்தனம் என்கிறார் என்பதுதான். திரும்பத் திரும்ப யோசித்தும் அன்றைக்கது விளங்கவில்லை. அதன்பின் தொடர்ச்சியாக மூன்று கேள்விகள் எழுந்தது. 1. தமிழ்ப் பூக்கள் அவருக்கு எப்படிக் கிட்டியிருக்கும் 2. இடதுசாரிகள் ஏன் இந்த நாவலை எதிர்க்கிறார்கள் 3. சௌதியில் வெளிவரும் ஒரு சாதாரணச் சிற்றிதழைக்கூட விடாது விரட்டிப் பிடித்து மறுப்பு செய்யும் அளவுக்கு ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ நாவல்மீது அவர்களுக்கு அப்படி என்ன காழ்ப்பு?
முதல் கேள்விக்குப் பதில் கிட்டவில்லை. அடுத்த இரண்டுக்கும் ஓரளவு பதில் கிடைத்தது. சு.ரா. இடதுசாரி இயக்கத்தில் இருந்தவர் என்றும், ஸ்டாலினின் சிந்தனை / செயல்பாடுகளை ஒட்டி இடதுசாரி இயக்கம் இரண்டாகப் பிரிந்தபோது, அவர் இடதுசாரி இயக்கத்தை விட்டே வெளியேறிவிட்டவர் என்றும், ‘ஜே.ஜே.: சில குறிப்புக’ளில் பிரதானப் பாத்திரமான ‘முல்லைக்கல்’ வழியாக இடதுசாரிகளை விமர்சனத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார் என்பதால் அவர்கள் சீற்றம்கொள்கிறார்கள் என்றும் அறிந்தேன். அரசியல் எல்லாத் துறைகளையும் படுத்தும்பாட்டிற்குக் குறையாமல் இலக்கியத்தையும் சீண்டுகிறதென்பது புரியவந்தபோது, இந்திய அரசியல் களம் இன்னும் எனக்குத் தெளிவானது.
ஒருவருடம் கழித்து மீண்டும் ஊர் வந்திருந்தேன். அன்றைக்கு, நவீன தமிழ் இலக்கியத்திற்குப் பெயர்சொல்லும்படி விளங்கிய ஒரே பதிப்பகமான ‘க்ரியா’வுக்குச் சென்று, அங்கே தேங்கிக் கிடந்த சிற்றிதழ்களின் அனைத்துப் பிரதிகளையும் பொறுக்கியெடுத்து, தூசி தட்டி வாங்கினேன். அவற்றை வாசித்த வகையில், அனைத்துச் சிற்றிதழ்களிலும் ‘ஜே.ஜே.:சில குறிப்புகள்’ குறித்து, ஒன்றுக்கு மேற்பட்ட விமர்சனங்களும் கலந்துரையாடல்களும் வெளிவந்திருப்பது தெரிந்தது! இடதுசாரி சிந்தனைகொண்ட இனி என்கிற மாத இதழில், அந்நாவலுக்குத் தொடர்விமர்சனம் வெளிவந்தபடி இருப்பது கண்டும் வியந்தேன். இடதுசாரி மனோபாவம் கொண்ட பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா, ‘ஜே.ஜே.: சில குறிப்புக’ளுக்குத் தனியே ஒரு விமர்சனப் புத்தகம் வெளியிட்டிருந்தார்! (அவரது அந்த விமர்சனத்தையொட்டிப் பாண்டிச்சேரி போய், அவரிடம் வலிய தர்க்கம் புரிந்ததை இன்றைக்கு நினைக்கிறபோது சிரிப்பு வருகிறது. இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும், பிந்திய காலகட்டத்தில் சாருவின் விமர்சனத்தை மறு வாசிப்புச் செய்தபோது அதன் பெரும்பகுதி ஒப்புக்கொள்ளும்படியாகத்தான் இருந்தது.) புத்தக விமர்சனப் பக்கமே தலைவைக்காத, சிறுகதைகளையும் நாவல்களையும் மட்டுமே எழுதிவந்த எழுத்தாளர்களில் பலர் இந்தப் புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியிருந்ததையும், கருத்துக்கள் சொல்லியிருந்ததையும் கண்டு வாசித்துக் கணித்தவகையில் ‘ஒரு நாவலுக்கு இத்தனை சக்தியா’யெனத் தோன்றியது.
‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ நாவலுக்கு விமர்சனங்கள் ஒருபாடு வந்து முடிந்தும், வந்திருந்த பல்வேறு விமர்சனங்களில் தங்களது விமர்சனமே துல்லியமெனச் சில எழுத்தாளர்கள் அடுத்த ரவுண்டில் அந்நாவலைப் பற்றி மீண்டும் பேசத்துவங்கிய வேடிக்கை நடந்தேறிய நாளிலும்கூட, விமர்சனமே தங்களது ஆத்மார்த்தப் பணியென இயங்கிவந்த க.நா.சு.வும், வெங்கட் சாமிநாதனும் அந்நாவலுக்கு விமர்சனம் என்கிற அளவில் விரிவாக எதையும் எழுதினார்கள் இல்லை. க.நா.சு. மட்டும் ஏதோ சில கருத்துகள் (‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’, ‘வித்தைத்தனம்’ கொண்டதென க.நா.சு.கூறியதாக அப்பொழுது ஒரு பேச்சுஉண்டு) கூறியதாகவும், அதுகுறித்த தெளிவை அறிய சு.ரா. முயன்றதாகவும் அறிந்தேன். என்னைக் கேட்டால், அந்த இரண்டு ஜாம்பவான்களும் அந்நாவல் குறித்த விரிவான விமர்சனத்தை வைத்திருக்க வேண்டும். அவர்களின் ஆத்மார்த்தப் பணியின் பங்கமற்ற உயர்வை அது இன்னும் கூட்டியிருக்கும். அவர்கள் ஏன் செய்யவில்லை? தெரியாது. க.நா.சு., வெங்கட் சாமிநாதன் தவிர்த்து, ‘ஜே.ஜே.: சில குறிப்புக’ளுக்குப் பலரின் விமர்சனங்கள் பல கோணங்களில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தபோதும், சு.ரா. எந்தவொரு விளக்கமோ எதிர்வினையோ செய்தாரில்லை! தனது நாவலை வெளியிட்டு விட்டு இலக்கியப் பரப்பின் பரபரப்பை அவர் மிக நிதானமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகப் பட்டது. இந்த மனோநிலை சராசரிக்கு மீறியதாகவே தோன்றியது. இரண்டு வருடங்களுக்கு மேலாக அந்நாவலுக்கு வந்துகொண்டிருக்கும் விமர்சனங்களுக்கு அவரது அபிப்ராயம் எனக்கு முக்கியமெனப்பட்டது. அதுகுறித்து நேரிடையாகக் கேட்டறிந்தால் என்ன என்பதாகத் தோன்றியவுடன் பரபரப்புக்கு ஆளானேன்.
1993 - டிசம்பர் மாத இரண்டாம் வாரத்தில் அவரைச் சந்திக்க அனுமதியும் தேதி, நேரம் கேட்டு சு.ரா.வுக்குக் கடிதம் எழுதப் பதில் வந்தது. அடுத்த வாரத்தில் ஓர் தேதியைக் குறிப்பிட்டு, வாருங்கள் என எழுதியிருந்தார். சீர்காழியில் இருந்து சென்னையைவிட, நாகர்கோவில் இன்னும் தூரம் அதிகம். அந்தப் பயணத்திற்கு ஆயத்த ஏற்பாடுகளோடு இருந்தபோது, சு.ரா.விடமிருந்து தந்தி வந்தது. தவிர்க்க முடியாத பணியின் காரணமாக வெளியூர் செல்வதாகவும், வர வேண்டிய தேதியினைக் குறிப்பிட்டு அடுத்துக் கடிதம் எழுதுவதாகவும் அதில் தகவல் செய்திருந்தார். ஒரு சில நாளில் அந்தக் கடிதமும் வந்தது. ‘ஜனவரி முதல் தேதி வாருங்கள், உங்களை நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும்’ என்று எழுதியிருந்தார்.
புத்தாண்டு பிறக்கும் இரவில், எங்கள் ஊர் பஸ் ஸ்டாண்டில் பயணம் புறப்பட நின்றேன். தூரத்தில் கத்தோலிக்கத் தேவாலயத்தின் பிரார்த்தனை ஒலி மிதந்து வந்தது. பஸ் ஸ்டாண்டின் மையத்தில் மாணவர்கள் குழு ஒன்று, எதிர்பாராத தருணத்தில் வந்து ஆக்கிரமித்தபடி, இரவு பன்னிரண்டு முடிந்த நொடியில் வெடிகளை வெடிக்கச்செய்து ‘சில்க் ஸ்சுமீதா வாழ்க’ வெனக் கோஷமிட்டனர். கூடவே ‘ஹாப்பி நியூ இயர்’ கோஷமும் எழுந்தது.
மறுநாள் பகல் நாகர்கோவில் போய் இறங்கியபோது ஊரே புத்தாண்டுக் குதூகலத்தில் இருந்தது. எனக்கு ‘பெத்தலெகம்’ வந்து சேர்ந்துவிட்ட மகிழ்ச்சி! வாடகை அறையில் என்னைச் சரி செய்துகொண்டு, சு.ரா. தரிசனத்திற்காகப் புறப்பட்டேன். சு.ரா. வீட்டில் இருந்தார். வரவேற்றார். காலில் போட்டிருந்த 'ஸ்ஸூ'வுடன் வீட்டின் உள்ஹாலுக்கு அனுமதித்தார். ஸ்வீட், காரம், பில்டர் காஃப்பியெல்லாம் ஆனது. வீட்டின் மாடியில் உட்கார்ந்து பேசலாமென அழைத்தார். ஒரு சிறுரூம் தடுப்பும், மெட்டைத்தளமுமான அந்த இடம், அதன் சுற்றுபுறத்தோடு எனக்குப் பிடித்திருந்தது. ‘காகங்கள்’ என்கின்ற இலக்கிய அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் இங்குதான் நடக்கும் என்றார் சு.ரா.! நான் வேறு யோசிப்பில் கொஞ்சம் படபடப்பாக இருந்தேன். அதை சு.ரா. புரிந்துகொண்டவராக, ‘நீங்கள் புகைப் பிடிக்கணுமென்றால், புகைக்கலாம் என்றார்.’ அவரிடம் நான் சிகிரெட் பாக்கெட்டைத் திறந்து நீட்டியபோது, சமீபத்தில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டதாகச் சொன்னார்.
அந்த வீடு அழகான சூழலில் அமையப்பெற்றிருந்தது. நாலாபுறமும் பசுமையான மரங்கள். மெயின் ரேட்டையொட்டி அது இருந்தாலும், வெளிச் சப்தம் எட்டாத உட்புறத்தில் இருந்தது. இடைப்பட்ட தூரத்தை மூடி மறைப்பது மாதிரி வயதுகூடிய சப்போட்டா மரம் ஒன்று ஏகத்திற்கும் கிளை விட்டுத் தழைத்து, பூத்து, காய்த்து, அடித் தரையெல்லாம் போர்வையாகக் காய்ந்த உதிரிப்பூக்கள். மரத்தின் ஒரு பகுதிக் கிளைகள் மொட்டை மாடியை எட்டித் தொட்டுக்கொண்டிருந்தது. மாடியின் முகப்பில் பசு உருவின் பின்புலத்தோடு புல்லாங்குழல் வாசித்தபடி ‘ஸ்டைலான’ கண்ணன். அந்த ‘சுந்தர விலாஸ்’ இன்னும் மனதில் அதே பசுமையோடுதான். அதன் வசீகரம், அங்கே இன்றைக்கும் அப்படியே இருக்கிறதா? தெரியவில்லை!
சு.ரா.விடம், ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ எழுதிய அனுபவத்தைக் கேட்டேன். நீண்டகால அவகாசம் எடுத்துக்கொண்டு அந்த நாவலை எழுதியதாகச் சொன்னவர், ‘புளிய மரத்தின் கதை’ எழுதி முடித்தபின் தொடங்கிய நாவலிது என்றும், ‘புளிய மரத்தின் கதை’ எழுதி முடித்து இருபது வருஷமாவதாகவும் கூறினார். படைப்பின் மீது அவர் எடுத்துக்கொண்ட சிரத்தையும் கால அவகாசத்தையும் யூகித்த எனக்கு, ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ வாசித்த நாழியில் நான் சொக்கிய தருணங்கள் நினைவுக்கு வந்தது. இத்தனை சிரத்தையும், இத்தனை கால அவகாசமும்தான் அந்த நாவலை அத்தனை உயரத்திற்கு உயர்த்தியிருப்பதாகத் தோன்றியது.
சு.ரா.வுக்கு முன்பாகவும், அவர் வாழ்ந்த காலத்திலும் தனிமனிதன் தூக்க முடியாத அளவுக்குப் புத்தகங்கள் எழுதுகிறவர்களையும், அதற்கு அவர்கள் வைத்த சொத்தை வாதங்களையும் நாம் கவனித்தபடிதான் இருக்கிறோம். வியாபார நோக்கும், புகழ்ச்சி வேண்டித் தனக்கு இல்லாத கீர்த்திகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதையும் தாண்டி அந்தப் புத்தகச் சுமையைப் படைத்ததில் வேறு என்ன இலக்கியக் காரணம் இருக்க முடியும்?
‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ எழுதும்போதே, தனது இலக்கிய நண்பர்கள் அதன் சில பகுதிகளைப் படித்து, சிலாகித்து அபிப்ராயம் சொன்னபிறகே தெடர்ந்தெழுத ஆவல் கொண்டதாகச் சொன்னார். அந்த நாவலின் இரண்டாம் பகுதியான ஜே.ஜே.யின் டைரி குறிப்புகளை எழுதி முடித்தபோது, தலை தெறிக்கும் படியானதோர் வலியினைத் தான் கொண்டதாகச் சொன்னார். நிச்சயம் அப்படியோர் வலியின் அவஸ்த்தையை அவர் கொண்டிருக்கக்கூடும். நம்பவும் நம்பினேன். அந்த டைரிக் குறிப்பின் உள்ளார்ந்த வெளிப்பாடு கனமான சங்கதிதான்.
ஜே.ஜே.யின் டைரி, ஜே. கிருஷ்ண மூர்த்தியை நினைவூட்டுகிறதே என்றதற்கு, அதை ஒப்புக்கொண்டவர் கொஞ்சக் காலம் அவரைப் பின்தொடர்ந்ததையும் சொல்லிவிட்டு, உங்களால் ஜே.கே.வைப் பின்பற்ற முடிகிறதாவென என்னைக் கேட்டார். பின்பற்ற நிறைய ஆசையிருந்தும் முடியவில்லை என்றேன். அது அப்படித்தான் என ஒப்புக்கொண்டார்.
என்னோடு அண்ணாமலையில் படித்த செலவராஜ் என்ற நண்பர்தான் எனக்கு ஜே.கே.வின் எழுத்துகளை அறிமுகம்செய்தான். அன்று ஜே.கே.வைப் படித்து முடித்ததும் அவனோடு அது பற்றிப் பேசியபோது, ஜே.கே.வுடைய தத்துவங்கள் அனைத்தும் யோசிக்கும்படியும், யோசித்தவைகளை ஒப்புக்கொள்ளும்படியும் இருக்கின்றன. ஆனால், நம்முடைய இந்த வயதில் அதைப் பற்றிக்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை என்றேன். அதற்கு அந்த நண்பன் சொன்னான், “இன்றைய நம் உணர்வுகள் சதையோடும், இரத்தத்தோடும் கலந்துவிட்டவைகள். திடுமென இன்றைக்குப்போய் அந்தத் தத்துவங்களை வாழ்வில் பிணைத்துக்கொள்ள முடியாது. ஒருவேளை நாம் பரம்பரைப் பணக்காரனாக இருந்தோமெனில் எதுகுறித்தும் கவலைப்படாமல் அவரோடு தாராளமாகப் போகலாம் என்றான். அவன் கூறியதைத் திரும்பத் திரும்ப யோசித்ததில் சரியென்றுதான் பட்டது. அதனால்தான் சு.ரா. அதுகுறித்துக் கேட்டபோது உடனே அப்படிச் சொன்னேன்.
கணையாழி இதழ், அன்றைக்கு இலக்கிய வாசகர்களின் பெரிய வரவேற்பைப் பெற்ற இலக்கிய இதழ். பல படைப்பாளிகள் அதில் எழுதியபோதும் சு.ரா. அதில் எழுதுவதில்லை. அதுகுறித்தும் கேட்டேன். கணையாழியின் போதாமையைச் சொல்லியவர், இந்த இதழ் கணையாழியை வாசித்தீர்களா என்று கேட்டார். வாசித்தேன் என்றேன். நடந்துகொண்டிருக்கும் தமிழீழப் பிரச்சனை எத்தனை கனமானது? அதை அவர்கள் அணுகும் விதத்தைப் பார்த்தீர்களா என்றார். அவர் குறிப்பிட்ட செய்தி, கணையாழில் நான்கு விசயதானங்களுக்குக் கீழ் எழுதப்பட்ட ஒரே தலையங்கத்தில், தமிழீழம் குறித்த ஏதோ ஓர் பிரச்சனையின் அலசல் வெறும் நான்கு வரியில் இடம் பெற்றிருந்தது.
தொடர்ந்த சம்பாசனையில், நான் எதுகுறித்து அவரைச் சந்திக்க நினைத்தேனோ அந்தமுனைக்கு வந்தேன். ‘ஜே.ஜே.:சில குறிப்புக’ளுக்குக் கடந்த இரண்டு வருடங்களாக எல்லாத் தரப்பிலிருந்தும் ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துவிட்டன, உங்கள் நாவலில் முல்லைக்கல் நாயரை இடதுசாரி சிந்தனை கொண்ட எழுத்தாளராகக் காட்டி, அவரை விமர்சனத்திற்கு உள்ளாக்கியதன் பொருட்டே, இடதுசாரிச் சிந்தனையாளர்கள் அநியாயத்திற்கு உங்களையும், உங்களது நாவலையும் விமர்சிக்கிறார்கள். நீங்களோ எந்தவொரு விமர்சனத்திற்கும் இன்றுவரை பதில் செய்யவில்லை! உங்களது விளக்கத்தை, எதிர்வினையைப் பதிவுசெய்வதுதான் சரியாக இருக்கும் என்றேன்
அந் நாவலுக்கு இன்னும் விமர்சனங்கள் வந்தபடி உள்ளன என்றும், கொஞ்சக் காலம் கழித்து நிச்சயம் பதில் செய்வேன் என்றும் கூறினார். சில ஆண்டுகள் கழித்து எதிர்வினையற்ற தன்னிலை விளக்கத்தையும் பதிவுசெய்யவே செய்தார். ஆனால், விமர்சனம் செய்த பலரின் குறைகளுக்கு அதில் பதில் இருந்ததாகத் தெரியவில்லை. ஒருவகையில் எல்லோரின் விமர்சனங்களுக்கும் பதில் சொல்வதென்பது ஆகிற காரியமுமில்லைதான்.
அந்த நாவலின் ஓரிடத்தில்,“இந்த பறவைகளின் இறப்பை நாம் காண முடிவதில்லை! அவைகள் எங்கேபோய் இறக்கின்றன?” என்பதாக சு.ரா. வியந்திருப்பார். அது ஒரு கவிதைநயம் கொண்ட வரி! சு.ரா.வுக்கு இதுகூடத் தெரியாது போனதேயென நாம் நினைத்துவிட முடியாது. ஏனெனில் அது அவருக்குத் தெரியும்! நாவலில் ஏதோ அர்த்தத்தில் அப்படி அந்த வரியினைக் கவிதையாக்கியிருக்கிறார் என்றுதான் நினைக்கத் தோன்றும். அதுதான் சரியான வாசிப்பின் அடையாளமாகவும் இருக்கும். ஆனால், அந்நாவலுக்கு விமர்சனம் எழுதிய தருமு சிவராம் அந்த வரியினைச் சுட்டி, இதுகூட சு.ரா.வுக்குத் தெரியாதாவென எள்ளி நகையாடி, பறவைகள் எங்கே எப்படி இறக்கிறதெனறும், இறந்தப் பறவைகள் எந்தந்த மிருகங்களுக்கும் ஜந்துக்களுக்கும் இரையாகிறதென்றும் பெரியதோர் வியாக்கியானமே செய்திருந்தார். இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கெல்லாம் யாரால்தான் பதில் தந்து மாளும்!
ஜே.ஜே பற்றியும், முல்லைக்கல் பற்றியும் கேட்ட ஒரு கேள்விக்கு ஜே.ஜே.யும் முல்லைக்கல்லும் எல்லா மொழி எழுத்தாளர்களிலும் இருக்கிறார்கள் என்றும், அவர்களை நாம் வாசர்களின் பார்வைக்குக் கொண்டுவந்து சர்ச்சிக்க வேண்டியது அவசியம் என்றார்.
ஜே.ஜே.யின் சில கோபங்களை யதார்த்த கோணத்தில் பார்க்கிறபோது, அதில் பெரிய அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லையே என்ற நான், ஒரு மாட்டின்மீது யாரோ ஒருவன் வெற்றிலையைக் குதப்பிய எச்சியலைத் துப்பினான் என்பதற்காக அவன் கொள்ளும் பெரும்கோபமும், அதுகுறித்த அவனது அநியாயத்திற்கு மன உலைச்சலையும் முன்வைத்தேன்.
ஜே.ஜே. ஒரு ‘perfectionist’ என்றும், அவனால் இந்தரீதியிலான மனிதச் செயல்களை ஜீரணிக்க முடியவில்லை என்பதாகவும் கூறினார். அப்படி அவர் கூறினாலும், அந்தப் பதில் ஏற்கத்தகுந்ததாக இல்லை. மனிதக் கோமாளித்தனங்களும் சேட்டைகளும் நிரவிக் கிடப்பதுதான் சமூகம். அது ஓர் ஓர் யுனிவர்சல் சாபம்! எந்த ஒரு தேசத்தின் எந்த ஒரு சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கே நூறு சதவீதம் யாரும் சரியான கோணத்தில் உருகொள்வதும் சாத்தியமில்லை. இப்படியே தொடர்ந்து, தான் ஒரு ‘perfectionist’ என்கிற விறைப்பில் அவன் கோபப்படுவானேயானால், அவனுக்கு நாளின் இருபத்திநாலு மணிநேரமும் அதற்கே போதாது. யோசிக்கிறபோது பச்சை இந்தியனான ஜே.ஜே.கூடச் சிறுநீர் கழிக்க வெளியில், பாதையோரத் திருப்பங்களைப் பயன்படுத்தவும் தவறியிருக்க மாட்டான். சு.ரா.விடம் இப்படியெல்லாம் அதுகுறித்து அடுத்தடுத்துப் பேசுவது சரியாகப் படவில்லை. அவர் வீட்டில் பருகிய பில்டர் காஃப்பியின் மணமும் அதன் சுவையும் இன்னும் நாவில் மீதம் இருந்தது. சிகிரெட் பாக்கெட்டைத் திறந்தேன்.
இந்த நாவல் தமிழுக்குப் புதுமையான ஒன்று என்கிறரீதியில் கேட்கிறேன், வாசகர்கள் இந்த நாவலை எப்படி அணுகுகிறார்கள்? உங்களுக்கு அது திருப்தி தருகிறதா? வாசகர்கள் இந்த நாவலை வித்தியாசமாகப் பார்க்கின்றார்கள் என்றும், பிற தீவிரப் படைப்புகளை வாசிக்கச் சிரமப்படுவது மாதிரி இந்த நாவல் வாசிப்பும் அவர்களுக்கிருப்பதாகத் தெரிவதை, அவர்களின் கடிதம் வழியே அறிய முடிகிறதென்றார். நாவலில் கடைசியாக இணைக்கப்பட்டுள்ள அனுபந்தத்தில் காணும் ஜே.ஜே.யின் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்பதாகக்கூடக் கடிதத்தில் கேட்டு எழுதுகிறார்கள் என்று அவர் சொன்னபோது, முகத்தில் கீற்றாய் அர்த்தப் புன்னகை.
‘ஜே.ஜே.: சில குறிப்புக’ளில் அவர் வகுத்த அப்படியான அமைப்பியலின் நேர்த்தியினால், வாசகர்கள் சிலர் அந்த அனுபந்தத்தை நாவலோடான கடைசிப் பக்கங்கள்யென உள்வாங்கிக்கொள்ள முடியாமல், தனியாகப் பிரித்துப் பார்த்துவிட்டார்கள்! ஜே.ஜே.யை நிஜத்தில் வாழ்ந்த எழுத்தாளனாகக்கூட அவர்கள் நம்பியிருக்கக் கூடும்!
நான் அந்த நாவலை முதல் வாசிப்பு செய்தபோது, என் இலக்கிய நண்பரான ஹாஜா அலியிடம் டெலிபோனில் பேசினேன். அவர் அந்நாவலை எனக்கு முன் வாசித்திருந்ததனால், அதைப்பற்றிப் பேசச் சௌகரியமாகவும் இருந்தது. ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ நாவலைவிட,பின்னால் இருக்கிற ஜே.ஜே.யின் டைரிக் குறிப்பு நன்றாக இருந்தது என்றேன். அவர் சிரிப்பது கேட்டது. என்ன விசயம் என்றேன். “அது அப்படி இல்லிங்க ‘It's totaly a novel’ என்றார். எனக்குக் குழப்பமாக இருந்தது. First page -ஐத் திருப்பிப் பாருங்க, அதிலே நாவலுன்னுப் போட்டிருக்கும், டைரின்னுயெல்லாம் தனியா ஒன்னும் கிடையாது” என்றார். கொஞ்ச நேரம் கழித்துத்தான் அந்நாவலின் அமைப்பியலிலான மயக்கம் புரிந்தது. அவரும் இந்த அமைப்பியல் வெற்றியை உணர்ந்தவராகத்தான் இருந்தார். அதனால்தான் அந்த புன்னகைக் கீற்று! இந்த அமைப்பியலை யூகித்துதான் அந்நாவலை க.நா.சு. வித்தை என்றாரோ?
சு.ரா.வைச் சந்தித்த பின்னர் சில ஆண்டுகள் கழித்து க.நா.சு.வைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் டெல்லியிலிருந்து சென்னைக்குத் தனது ஜாகையை மாற்றிக்கொண்டு வந்திருந்த நேரமது. “ஏன் ஜாகையை மாற்றிக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டீர்கள்?” என்ற பத்திரிகைப் பேட்டி ஒன்றின் கேள்விக்குச் “சாவதற்காகச் சென்னைக்கு வந்துள்ளேன்,” என்றிருந்தார். அவரது பதில் யோசிக்கும்படி இருந்தது. தவிர, அவரைப் பார்க்கவும் தூண்டியது. சாவதற்காகச் சென்னை வந்திருந்த அவரை, மகிழ்ச்சியுடன் சந்தித்தேன். மதிப்பிற்குறிய ‘க்ரியா’ திலீப் குமார்தான் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். போனஇடத்தில் அவரிடம் ஏகப்பட்டகேள்விகள். ‘நீங்கள் ஏன் ஜே.ஜே.சில குறிப்புகளை ஒப்புக்கொள்ளவில்லை,’ என்ற கேள்விக்குக் கொஞ்சமும் நேரமும் எடுத்துக்கொள்ளாமல், “அவரது புளிய மரத்தின் கதையை நான் நாவலாக ஒப்புக்கொள்வேன்” என்றார். தொடர்ந்து அந்நாவல் குறித்துப் பேசுவதை அவர் தவிர்ப்பது மாதிரித் தெரிந்தது. ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ நாவலை நாம், நாவலின் புதிய வடிவம் என்று சிலாகித்த அதே வேளை அதை அவர் நாவல் வடிவமாகவே ஒப்புக்கொள்ளவில்லை என்பதாக உணர்ந்தேன்.
ஓர் ஆறு ஆண்டுகளுக்கு முன், கணையாழி அலுவலக வாசலில் வைத்துப் பெரியவர் வெ.சா.வைச் சந்தித்தேன். அவருக்கு வணக்கமெல்லாம் செய்தபிறகு கூடுதல் நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அவரிடம் மறக்காமல் கேட்டது, “நீங்கள் ஏன் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலுக்கு விமர்சனம் எழுதவில்லை,” என்பதுதான். இல்லை, நான் எழுதியிருக்கிறேன் என்றும், கர்நாடகாவிலிருந்து வரும் ஆங்கில நாளிதழில் அது வந்தது என்றும் சொன்னார். தொடர்ந்து அது குறித்துப் பேச முற்படும்முன் அவர் பக்கத்திலிருந்தவரிடம் வேறுபேச்சுக்குப் போய்விட்டார். பிறகும்கூட நிறைய நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன், டீயெல்லாம்கூடக் குடித்தோம் ஆனால் அவர் நான் எதிர்பார்த்திருந்த முனைக்கு வரவில்லை. அந்த ஆங்கில நாளிதழில் அவர் என்ன எழுதியி ருந்தார் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. அதை யாரேனும் தமிழில் பதிந்திருக்கிறார்களா என்பதும் தெரியாது.
நீண்ட நேரத்திற்குப் பிறகு, சு.ரா.வுடன் அவர் வீட்டு மாடியை விட்டு இறங்கி முன்புறமுள்ள பிரதான சாலையில் வலது புறமாக நடந்தபடி பேசிக்கொண்டே போனேன். அந்தச் சாலையின் முடிவில், இரண்டு மூன்று சாலைகள் சந்திக்கும் மிகப்பெரிய வட்ட வடிவிலான இடம் தென்பட்டது. அதன் மையத்தில் சிதைந்த, வயதுகூடிய ஓர் புளிய மரம்! பார்க்கப் பரிதாபகரமாகத் தெரிந்தது. எங்கள் ஊர்ப்பக்கச் சாலையோரங்களில் மைல்கணக்கில் ஏகத்திற்கும் பெருத்த வளமான புளிய மரங்களைப் பார்த்திருக்கிற எனக்கது அப்படித் தெரிந்ததில் ஆச்சரியமில்லை! அந்தப் புளியமரத்தைச் சுட்டிக்காட்டிய சு.ரா., புளியமரத்தின் கதையில் பேசப்பட்ட புளியமரம் இதுதான் என்றார். அவர் சொன்னார் என்பதற்காக அதை விசேசமாகப் பார்த்தும் அது எனக்கு அதே பரிதாபத்தோடுதான் தெரிந்தது. தவிர, புளியமரத்தின் கதையை அன்றைக்கு நான் படிக்கவுமில்லை. படித்திருந்தேன் என்றாலும், நாவலின் கட்டியக்காரன் மாதிரி கதைகூறிய அந்த வித்தகக்காரக் கிழவனைத்தான் தேடியிருப்பேன்!
இன்னொரு திருப்பத்தில் நடந்துகொண்டிருந்தபோது, அந்தச் சாலையில் இருந்து இன்னொருசாலைக்குக் குறுக்கு வழியாக ஓர் உயர்நிலைப் பள்ளிக் கட்டிடத்தைக் கடந்தபோது, தான் படித்த பள்ளிக்கூடம் என்றார். அவரது சிறுகதைகள் சிலவற்றில் அந்தப் பள்ளிக்கூடம் இடையோட்டமாகக் காட்டப்பட்டிருப்பதை வாசித்திருக்கிறேன். அந்தப் பள்ளிக்கூடத்தையும் அதையொட்டிய பெரிய விளையாட்டு மைதானத்தையும், அந்த மாலை வேளையில் மாணவர்கள் அங்கே விளையாடிக்கொண்டிருந்ததையும் ஓர் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்தோம். சிறிது நேரத்திற்குப் பிறகு நான் மட்டும் எழுந்து நின்று, அந்த உயர்நிலைப் பள்ளியின் நான்கு புற காம்பௌண்ட் சுவரையும், நடைபாதையின் ஓரமாக ஓங்கி வளர்ந்து நின்ற 'நெட்லிங்'கையும் பார்த்தேன். நான் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருப்பதாக சு.ரா. நினைத்திருக்கக் கூடும்! அப்படி அவர் நினைத்திருந்தால் அது தவறாகப் போயிருக்கும். சீர்காழியில் நான் படித்த 'சபாநாயக முதலியார் இந்து உயர் நிலைப்பள்ளி'யின் கட்டடமும் அந்த நடைபாதை நெட்லிங்கும் அப்படியே இங்கே பெயர்த்து வைத்தமாதிரித் தெரிந்ததனாலோ என்னவேதான் அப்படிக் கண்கொட்டாமல் பார்த்தேன்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சாலையில் வெகுதூரம் நடந்தோம். ஒரு திருப்பத்திலிருந்த, டீக்கடையில் டீ சாப்பிட்டுவிட்டு மீண்டும் வீடு நோக்கித் திரும்பினோம். அவரது வீட்டின் அருகான்மையில் ஒரு புத்தகக்கடை! ஏதோ பல சரக்குக் கடை மாதிரி அல்லது அதைவிட மோசமான நிலைகொண்டதாக இருந்தது. புத்தகங்களைக் கீரைக்கட்டு மாதிரித் திட்டுத்திட்டாகக் குவித்து வைத்திருந்தார்கள். என்றாலும், அந்தக் கடையில் புத்தகம் வாங்கவே நினைத்தேன். அந்தக் காலகட்டத்தில் புத்தகக் கடையைப் பார்த்துவிட்டால் எனக்கு ஏற்படும் பரபரப்பு சொல்லி மாளாது. அறிவே புத்தகத்திலிருந்துதான் என்பதாக ஓர் மாயை. சு.ரா.வை அவரது டேஸ்டிற்கு ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துத் தரும்படி சொன்னேன்.முதலில் தயங்கியவர், பின் 'வா.ரா. வாசகம்' என்கிற புத்தகத்தைத் தேர்வுசெய்து தந்தார். இன்றைக்கும் என் புத்தக அடுக்கில் அது தலை காட்டிக்கொண்டிருக்கிறது.
இரவென்றும் பாராது நான் தங்கியிருந்த லாட்ஜ்வரை உடன்வந்திருந்து சு.ரா என்னை வழியனுப்பி வைத்தார். சு.ரா.வுடன் இன்னொரு எழுத்தாளரும் உடன்வந்தார். அவர்தான் அ.கா. பெருமாள். சு.ரா.வுடன் நான் சம்பாசனைகள் தொடங்கியபோதே அவர் வந்தார். சு.ரா.எனக்கு அவரை அறிமுகம் செய்துவைத்தார். அதற்கு முன்னால் நான் அவரது எழுத்தைப் படித்தது இல்லை. சரியாகச் சொன்னால், இலக்கிய வட்டத்திற்குள் அவரை அறியநேர்ந்தது அப்பொழுதுதான். அன்றைக்கு இலக்கியத்திற்கு நான் அத்தனை பொடுசு. அ.கா. பெருமாள் ஆரம்பம் தொட்டுக் கடைசிவரை அன்பு கொண்ட பார்வையல்லாமல் வேறொன்றும் என்னோடு பேசினாரில்லை! ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ படித்துவிட்டு எல்லைகள் பல தாண்டி வந்துவிட்ட பொடியன் என்றவர் நினைத்திருக்கலாம். நிஜமும் அதுதான்.
சு.ரா.வேடு எனக்கு அதன் பிறகும் சிலகாலம் கடிதத் தொடர்பு இருந்தது. எனது தந்தை இறந்ததையொட்டிய என் ஆற்றாமையை சு.ரா.வுக்கு எழுதியிருந்தேன். சு.ரா.விடமிருந்து பதில் வந்தது. ஒரு கவரில் இரண்டு கடிதங்கள். ஒன்று, அதற்குமுன் நான் இலக்கியம் சார்ந்து எழுதிய சங்கதிகளுக்கானது. இன்னொன்று, என் துயரத்தைத் துல்லியமாக அவர் புரிந்துகொண்டதற்கான பதில். அவரது ஆறுதல் வரிகள் எனக்கு அன்றைக்குச் சரியான மனவைத்தியம்.
இன்றைக்குக்கூட எனக்கு, ஒருவரின் இறப்புகுறித்து அவரின் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லி எழுத வராது. இயற்கையின் தத்துவத்தையும், நடைமுறை வாழ்வின் போதாமையுமாகப் பெருவெளித் தத்துவங்களை அதில் மொழுவி, சம்பந்தப்பட்டவர் மதவாதியாக இருந்தால், ஆண்டவனையும் ஆன்மாவையும் துணைக்கழைத்து... பெரிய கஷ்டம்! வாசிக்கும் சம்பந்தப்பட்டவனுக்கோ, இருக்கிற சோகம் போதாதென்று அந்தக் கடிதமும் கூடிக்கொள்ளும். சு.ரா. மறைவையொட்டி அவரது மகன் கண்ணனுக்கு ஆறுதல் கூற நினைத்தபோது, நல்ல பிள்ளையாக சு.ரா. எனக்கு எழுதிய அந்த ஆறுதல் கடித வரிகளையே காப்பிசெய்து அவருக்கு அனுப்பிவைத்தேன்.
சு.ரா.வை நாகர்கோவிலில் வைத்துச் சந்தித்தபிறகு, அடுத்து அவரைச் சந்தித்தது பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு! ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ புத்தக வெளியீட்டின் விழாவின் போதுதான் அவரைப் பார்த்தேன். அந்த நாவலை அரங்கத்தில் வாங்கிய நான், விழா முடிந்த நேரத்தில் அதில் அவரிடம் கையெழுத்து வாங்கப் போனேன். கையெழுத்து இட்டுத் தந்தார். ‘என்னை நினைவிருக்கிறதா ஸார்,’ என்றேன். ஏறிட்டுப் பார்த்து யோசித்துவிட்டுத் ‘தெரியவில்லை’யென உதட்டைப் பிதுக்கித் தலையை ஆட்டினார். ‘ஜனவரி ஒன்னில் வாருங்கள், உங்களை நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும்’ என்ற அவரது கடித வரி ஞாபகத்திற்கு வந்தது. நிஜமாகவே அப்பொழுது ரொம்பவும் அவர் தளர்ந்திருந்தார். முதுமை மனிதர்கள்மீது ரொம்பவும்தான் ஆளுமை செய்கிறது. மனிதர்களை அது மறதியின்பால் தள்ளுவது ஆகப்பெரிய கொடுமை. யார்தான் தப்பிக்க முடியும்?
'தமிழ் இனி 2000' விழாவின் முதல்நாளன்று சென்னை மியூசியம் அரங்கில் கவிஞர் சல்மாவின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது. அந்த வெளியீட்டு விழாவில் மீண்டும் சு.ரா.வைக் காணும் வாய்ப்புக் கிடைத்து. இந்தமுறை தூரத்தில் மேடையில் வைத்துக் கண்டேன். அவரது முகம் சரிவரப் பார்க்கக் கிடைக்காது போனதில் சங்கடமில்லை. அவரது உருவம்தான் மனதில் தெளிவாக இருக்கிறதே!
இன்றைக்கு சு.ரா. இல்லை. ‘ஜே.ஜே.: சில குறிப்புக’ளில், 'ஜே.ஜே.' மாதிரி ஆக வேண்டுமென பாலு என்கிற இளைஞன் ஆசை கொள்வான். அதை எழுதிய சு.ரா. மாதிரி ஆகணும் என்பதாகக்கூட அந்நாவலைப் படித்த பல இளைஞர்கள் ஆசைகொண்டார்கள். அவர்களது ஆசை வீண்போகவில்லை. சிலர் தங்கள் படைப்பின் வழியே அப்படி முயன்று சாதித்தும் இருக்கிறார்கள்! அந்தத் தொட ர்ச்சியான முயற்சிகள் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு சு.ரா.வுக்குப் பதிலாகப் பல சு.ரா.க்களைக் காலத்தில் நாம் பார்க்கலாம். பின், சு. ரா. வுக்கு இறப்பேது!